Friday, September 25, 2009

காணவில்லை!

முதலில் நாரைக் காணோம்.
அப்புறம் நாரோடு சேர்ந்து பூவும் காணோம்.

முன்னொரு காலத்தில் பூ கட்டுபவர்கள் "நார்" என்று ஒன்றை உபயோகித்து வந்தார்கள். சில வருடங்களுக்கு முன், அந்த நார் ஒரு நாள் காணாமல் போய், பிளாஸ்டிக் ஒயரும் நூலும் வந்தன. இப்போது, பூவே பிளாஸ்டிக் பூ ஆகிவிட்டது.

இந்த முறை நவராத்திரிக்காக பூவைத் தேடி அலைந்தது தான் மிச்சம். நிஜ மல்லிகையும் மருவும் ரோஜாவும் மாயமாய் மறைந்து விட, எங்கும் பிளாஸ்டிக், எதிலும் பிளாஸ்டிக்.

எதிர் வீட்டில் கொலுவிற்கு அழைத்திருந்தார்கள்.

பிளாஸ்டிக் பூ மாலை அணிந்தபடி அம்மன் சிரிக்க, கீழே பிளாஸ்டிக் ஆப்பிள், பிளாஸ்டிக் மாம்பழம், இன்ன பிற.

தாம்பூலத்தில் பிளாஸ்டிக் வெற்றிலை "சும்மாநாச்சுக்கும்" வைக்கப்பட்டிருந்தது.
அதை கண்ணால் பார்த்து விட்டு, தட்டில் உள்ள பிற பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.

வீட்டுக்கு வந்ததும், சுண்டல் பாக்கெட்டைப் பிரித்தேன்.

மூக்கு அருகே வைத்து முகர்ந்து பார்த்தேன் - எண்ணெய் வாசனை.
விரல் இடுக்கில் வைத்து நசுக்கிப் பார்த்தேன் - நசுங்கியது.
கொஞ்சூண்டு நகத்தால் கீறிப் பார்த்தேன் - பெய்ன்ட் வர வில்லை.

இருந்தாலும் இன்னும் சந்தேகமாவே இருக்கு - இந்த சுண்டலை சாப்பிடவா, இல்லை ஷோ-கேசில் வைக்கவா?

1 comments:

Anonymous said...

dear anu , sundalai kasu madihiri sundi parthu viduvadhuthane, sapidalama kudatha yeru
anbulla amma